CINEMA

குக் வித் கோமாளி நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ்? வெங்கடேஷ் பட்டுக்கு பதில் என தகவல்..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டுக்கு பதில் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்குகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த நான்கு சீசன்களிலும் வந்த கோமாளிகள் மற்றும் குக்குகள் மட்டுமல்லாது நடுவர்களுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், நிகழ்ச்சியை இயக்கி தயாரித்து வரும் நிறுவனம் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தது. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வருமா என்று பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியது.

மாதம்பட்டி ரங்கராஜ்?

இதனிடையே, நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தானும் வெளியேறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், புதிய ஒரு களத்தில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி தன்னுடன் தாமுவும் இருப்பார் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் அந்த பதிவை இரண்டு நாட்களில் நீக்கிவிட்டார்.

இதனால் அடுத்த நடுவராக கிச்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சுரேஷ் உள்ளிட்டவர்களின் பெயர் அடிபட்டது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ப்ரோமோஷூட் முடிந்துவிட்டதாகவும், வெங்கடேஷ் பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் களமிறங்குவார் என்றும் தகவல் வந்துள்ளது.

கோவையை சேர்ந்த நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் சில காலமாக சமையல் துறையில் கலக்கி வருகிறார். மேலும், பிரதமர் மோடி வரை இவரது சமையலை சாப்பிட்டுள்ளனர்.