Article

கூலி வேலைக்கு போய் தன்னை வளர்த்த தாய்க்கு 20 லட்சத்தில் கோவில் கட்டிய மகள்.. நெகிழவைக்கும் நிகழ்வு..!

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலகத்தில் அம்மாப்பாசம் இல்லாத உயிரினங்களே இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் அம்மாப்பாசம்.

எப்போதுமே அம்மா பாசத்துக்கு பணம் பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு அம்மா பாசம் உயர்ந்தது. அந்தவகையில் இங்கேயும் ஒரு பெண்ணின் அம்மாப் பாசம் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்

சென்னை அருகில் உள்ள கூடுவாஞ்சேரி, டிபன்ஸ் காலணியைச் சேர்ந்த பெண் லட்சுமி. அவர் சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் சுருக்கெழுத்தராக வேலை செய்து ரிட்டயர்டு ஆனவர். இவருடைய தந்தை இவரின் சின்ன வயதிலேயே வீட்டை விட்டு போய்விட்டார். குழந்தை, கட்டிய மனைவியையும் கவனிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து லட்சுமியின் அம்மா, கன்னியம்மாள் தான் பல இடங்களிலும் கூலி வேலைக்குப் போய் லட்சுமியை நல்ல நிலைக்கு உயர்த்தினார். கூடவே அவருக்கு அரசு வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

வயோதிகத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு கன்னியம்மாள் இறந்துவிட்டார். தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய தன் அம்மாவை பிரிந்து செல்ல வேண்டுமே என்பதாலேயே கன்னியம்மாளை விட்டுச் செல்ல மனமின்றி, லட்சுமி திருமணமே செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் கவர்மெண்ட் வேலையில் இருந்து ரிட்டயர்டு ஆன லட்சுமி, தான் ஓய்வுபெற்ற போது கிடைத்த பி.எப் உள்ளிட்ட ஓய்வூதிய பண பலன்களில் இருந்து தன்னை நன்கு படிக்க வைத்து, ஆளாக்கிய தன் அம்மா கன்னியம்மாளுக்கு 20 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டி, ஆறுகால பூஜையும் செய்துவருகிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.